6 - ம் வகுப்பு தமிழ் - தமிழ்த்தேன்
இன்பத்தமிழ்
இன்பத்தமிழ் பாடலை எழுதியவர் - பாரதிதாசன்
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். இவரது கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை பாடியுள்ளார். எனவே இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவரைப் பாவேந்தர் என்றும் போற்றுவர்.
தமிழ்க்கும்மி
தமிழ்க்கும்மி பாடலை பாடியவர் - பெருஞ்சித்திரனார்
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித் தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.
வளர்தமிழ்
உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் இரண்டையும் பெற்றுள்ளன. உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கிய வளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச் சிலவே.அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை சில மொழிகளே! தமிழ் மொழி அத்தகு சிறப்புமிக்க செம்மொழி ஆகும். தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை.பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார்,
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார்.
என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்என்று தமிழ்த்தாயின் தொன்மையைப் பாரதியார் கூறுகிறார்.
தமிழில் கிடைத்துள்ள மிகப்பழமையான நூல் தொல்காப்பியம் ஆகும்
மா என்னும் ஒரு சொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது.
தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும். இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும். நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்.
தாவர இலைப் பெயர்கள்
ஆல், அரசு, மா, பலா, வாழை - இலை
அகத்தி,பசலை, முருங்கை - கீரை
அருகு, கோரை - புல்
நெல், வரகு - தாள்
மல்லி - தழை
சப்பாத்திக்கள்ளி, தாழை - மடல்
கரும்பு, நாணல் - தோகை
பனை, தென்னை - ஓலை
கமுகு - கூந்தல்
தமிழ் எழுத்துகளின் வகை தொகை
தமிழ் மொழியின் இலக்கண வகைகள்
1.எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்
எழுத்து
ஒலி வடிவாக எழுப்பப்படுவதும், வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படும்
உயிர் எழுத்துக்கள்
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துக்கள் பிறக்கின்றன.அ முதல் ஔ வரை 12 உயிரெழுத்துகள் உள்ளன
ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்குக் கால அளவு உண்டு. எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கொண்டே குறில், நெடில் என வகைப்படுத்துகிறோம்.
மாத்திரை
ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ, ஒரு முறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவாகும்
குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு 1 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு 2 மாத்திரை
மெய்யெழுத்துக்கள்
மெய் என்பது உடம்பு என பொருள்படும். பதினெட்டு மெய்யெழுத்துக்கள் உள்ளன
உயிர்மெய்
மெய்யெழுத்துக்கள் பதினெட்டுடன் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை உயிர் மெய் எழுத்துக்கள்
ஆய்த எழுத்து
ஃ என்ற ஆய்த எழுத்தும் உள்ளது. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு அரை மாத்திரை
Comments
Post a Comment