6 - ம் வகுப்பு தமிழ் - கூடித் தொழில் செய்
நானிலம் படைத்தவன்
நானிலம் படைத்தவன் என்ற பாடலை எழுதியவர் முடியரசன்
இவரது இயற்பெயர் துரைராசு. இவர் பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
கடலோடு விளையாடு
நெய்தல் திணை
நிலம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
மக்கள்: பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்
தொழில்: மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல்
பூ: தாழம் பூ
வளரும் வணிகம்
ஒரு பொருளைப் பிறரிடமிருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும். பொருள்களை விற்பவரை வணிகர் என்பர். வாங்குபவரை நுகர்வோர் என்பர்.
பண்டமாற்று வணிகம்
தம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருட்களைக் கொடுத்து தமக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் ஆகும்
வணிகத்தின் வகைகள்
- வணிகத்தைத் தரை வழி வணிகம், நீர் வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாக பொருட்களைக் கொண்டு செல்ல எருது,கழுதை,குதிரை போன்ற விலங்குகளும், வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன.
- வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும்போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகச் சாத்து என்பர்.
- கடல் வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகமாகும்.
- கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் துறைமுகங்களாகும்.
- துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.
- தமிழ்நாட்டின் தலை சிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது
வணிகத்தைத் தனிநபர் வணிகம், நிறுவன வணிகம் என்றும் பிரிக்கலாம். தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது நிறுவன வணிகம் ஆகும்
சிறு வணிகம்
சிறு முதலீட்டில் பொருட்களை வாங்கி வந்து வீதிகளில் வைத்து விற்பனை செய்வது சிறு வணிகம் ஆகும்
பெரு வணிகம்
பெருந்தொகையை முதலீடு செய்து பொருட்களை அதிக அளவில் திரட்டி வைத்து விற்பனை செய்வது பெருவணிகம் ஆகும்
ஏற்றுமதியும் இறக்குமதியும்
ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவது ஏற்றுமதி எனப்படும். பிற நாடுகளிலிருந்து பொருட்களை வாங்குவது இறக்குமதி ஆகும். பழங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தேக்கு,மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம்,பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவிலிருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.
சுட்டு எழுத்துகள், வினா எழுத்துக்கள்
சுட்டு எழுத்துகள்
ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.அ,இ,உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்
அகச்சுட்டு
இவன், அவன், இது, அது - இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது
அகச்சுட்டு எனப்படும்
புறச்சுட்டு
அந்நீர்வீழ்ச்சி, இம்மலை, இந்நூல் - இச்சொற்களில் உள்ள எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள்தரும். இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்
அண்மைச் சுட்டு
இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு - இச்சொற்கள் நம் அருகில் உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே இது அண்மைச்சுட்டு எனப்படும்
சேய்மைச் சுட்டு
அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் - இச்சொற்கள் தொலைவில் உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே இது சேய்மைச்சுட்டு எனப்படும்
சுட்டுத் திரிபு
அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத் திரிபு எனப்படும். எடுத்துக்காட்டு: இப்பள்ளி - இந்தப்பள்ளி
வினா எழுத்துகள்
வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். எ,யா,ஆ,ஓ,ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துக்கள் ஆகும்
மொழியின் முதலில் வருபவை - எ,யா(எங்கு, யாருக்கு)
மொழியின் இறுதியில் வருபவை - ஆ,ஓ(பேசலாமா, தெரியுமோ)
மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை - ஏ(ஏன், நீதானே)
அகவினா
வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருமானால் அது அகவினா எனப்படும்.
எடுத்துக்காட்டு: எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை
புற வினா
வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருமானால் அது புறவினா எனப்படும்.
எடுத்துக்காட்டு: அவனா, வருவானோ - இச்சொற்களில் உள்ள ஆ,ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்
Comments
Post a Comment